புதன், 21 ஏப்ரல், 2010

மல்வத்து ஓயாவில் நீராடல் தொடர்கிறது



-பொலிகையூர் சு. க சிந்துதாசன்

மரணத்திலிருந்து மீண்டவர்களுக்காக
மல்வத்து ஓயாவில்
புனித நீராடலுக்கு ஏற்பாடு

நீண்டோடும் அவ்வாற்றை
முட்கம்பி வேலிகளால் கூறுபோட்டு
குளிப்பொழுங்கு நடக்கிறது

இந்த ஆறு என்றும்
சனத்திரளை
இம்மாதிரிக் கண்டிராது

கோடையாற்றில்
நீர் வற்றென்றாலும்
வேறு வழியின்றிப் பற்பலருமதை
நாடத்தான் செய்தனர்

புனித நீராடல்
தொடர்ந்தபடியிருக்க
ஆற்றின் நடையோடு
சேறு… சகதி…
மலம்… எனக் கலந்து
நீரின் நிலை மாறிற்று

இரத்தக் கறைபடிந்த
எனது ஆடைகள்
இன்னும் கழற்றப்படவுமில்லை
துவைக்கப்படவுமில்லை.

ஆற்றை வெறித்தபடி பார்த்த
நானும்
என்போன்றோரும்
திரும்பி நடக்கிறோம்

மல்வத்து ஓயாவில்
நீராடல் தொடர்கிறது.

நன்றி - வார்ப்பு

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

கைம்மாறு


-பொலிகையூர் சு. க சிந்துதாசன்

என் மனவெளியில்
விதைக்கப்பட்ட வலிகளில் இருந்துதான்
வாழ்விருப்பின் அடையாளம்
அர்த்தப்படுத்தப்பட்டது.
அவ்வலியின் உச்சமே என்னுள்
மலைசுமக்கும் மறத்தையும் தந்தது.

என் தல யாத்திரைகள் ஒவ்வொன்றும்
தங்குமடங்களிலேயே
நிறைவுற்றுப் போயினவெனினும்…
மாற்றீடாய்
தங்குமடங்களைத் தரிசனத்துக்கான
தலங்களாய்
ஆக்கும் திறனைத் தந்ததும்
அவ்வலிகளே.

வலிகள் ஏனோ வற்றாத ஊற்றாய்…
பீறிட்டுக் கொண்டிருந்தன.
இருந்தும்
என் மனவாழம்
அறியாமலவை
தோற்றே போயின.

குருசேஸ்த்திரத்தில் என் வாழ்வு
பாண்டவர்கள் பக்கத்தில் இருந்தாலும்
துரியோதனன் எனக்கு
உயிர்ப்பிச்சை தந்துள்ளான்.

அர்ச்சுணன் கையில்
நாகஸ்திரம் இருந்திருந்தால்… அது
பலமுறை ஏவப்பட்டிருப்பதுடன்
பல தலைகளையும் கொய்திருக்கும்.

காக்கப்பட்டவன் எவனெனினும்
‘காத்தவன்’ கடவுளல்லவா
கணமேனும் அவனை
மறக்கிலேன்!

நன்றி- வார்ப்பு, Saturdayமெயில்