
சு.க.சிந்துதாசன்
அருகாக ஒரு வெடி ஓசை
செவிப்பறை அதிர்கின்றது
புழுதி என்னை குளிப்பாட்டிப் போக
மூச்சுத் திணறிய படி
வெள்ள வாய்க்காலில் பாய்கிறேன்
அவ்வாய்க்கால்
ஒரு காப்பரணாய் இருக்க
அதில் நெடுஞ்சாண் கிடையாய்....
படுத்துக் கொண்டு
புலன்களை கூர்மையாக்கினேன்.
சற்றுத் தொலைவில்
இரைச்சலுடன் பல கவசவாகனங்கள்
எறிகணைகளை வீசிக்கொண்டு
நகர்ந்து வருகின்றன.
இனந் தெரியாத் திசைகளில் இருந்து
ஏவப்பட்ட பல்வேறு குண்டுகள்
எனைச் சுற்றி
வீழு்ந்து வெடிக்கின்றன.
அப்பளம் பொரிவது போல்
சுற்று முற்றிலும் துப்பாக்கி ரவைகள்
வெடித்துக் கொண்டிருந்தன.
வானைக் கிழித்து வந்து
ஆங்காங்கே
கிபீர்..... மிக்...பைற்றர்...
என்பன
குண்டுகளை உமிழ்ந்தன.
புரியாத பாஷைகளில் பேசியவாறு
மூர்க்கமாய் படைவீரர்கள்....
எனை நெருங்கிக் கொண்டிருந்தார்கள்.
எனைச் சுற்றி ஒரு
துவம்சம் நடந்து கொண்டிருந்தது.
எதையும் சமாளிக்க முடியாமல்
திணறுகிறேன்.
என் பின்னால்...
”கான்சப்” என்ற குரல் கேட்டது.
கைகளை உயர்த்தியவாறு
திடுக்கிட்டு எழுகிறேன்....
படுக்கை அறை
பூட்டிக் கிடந்தது.


