புதன், 21 ஜூலை, 2010

இலையானும் காகமும் நாயும்


சு.க.சிந்துதாசன்

உயிரோடிருந்தபோது
எவ்வாறெல்லாம் அவன்தன்னை
அழகு பார்த்திருப்பான்
இப்போதிவனை
இலையானும் காகமும்
புசித்து மகிழ்கிறது
வெளியேறிவிட்ட குருதி
கிரவல் வீதியின் சிறுகுழியில்
குளமாய்.. நிரம்பி
நாயொன்றின்
தாகம் தீர்க்கிறது

அலங்கோலப்பட்டுக் கிடக்குமிந்த
பிணம்
அடக்கம் செய்வதற்கானதா?
தகனம் செய்வதற்கானதா?
அதுகூடத் தெரியவில்லை.
அதிலொன்றேனும் செய்யப்படவுமில்லை.
அவனுக்கு மட்டுமல்ல
இக்கதியென
மனம் இறுகிக் கொள்கிறது.

அருகாக மிக அருகாக
நரிகளின் ஊளை
காதைக் கிழிக்கிறது.
தாங்க முடியாமல் தலைமறைவாகிறேன்.

நரிகளின் ஊளையைப் பொறுட்படுத்தாதபடி
இலையான் காகம்
நாய் என்பன
விருந்துண்டு மகிழ்கின்றன.

நன்றி-வார்ப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக